‘பேட்டைக்காளி’ டிரைலர் வெளியீட்டு விழா
12 Oct 2022
ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள முதல் இணையத் தொடர் ’பேட்டைக்காளி’. காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் பலவற்றை ‘பேட்டைக்காளி’ காண்பிக்க இருக்கிறது.
ராஜ்குமார் இயக்கத்தில், வெற்றிமாறன் வழிநடத்துபவராகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இத் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத்தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளாராம். கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி மற்றும் ஷீலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமான ‘வடம்’ நிகழ்ச்சியும் இடம் பெற்றது. சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு இது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால் அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம். இதை ‘பேட்டைக்காளி’ விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளது.
டிரைலர் வெளியீட்டு விழாவில், ஆஹா சிஇஓ அஜித் தாக்கூர் பேசுகையில்,
“நல்ல தரமான, பல தரப்பட்ட எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களை பார்வையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆஹா 100 சதவீதம் உறுதியாக இருக்கிறது. தமிழ்ப் பார்வையாளர்களுக்கு ஏற்றபடியான தமிழ் கலாச்சாரக் கதைகளை எடுத்துரைப்பதில் ஆஹாவை பொறுத்தவரை ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரை மிகப் பெரிய முன்னெடுப்பாகக் கருதுகிறோம். இதற்கு முன்பு நாங்கள் வெளியிட்ட ‘அம்முச்சி கிராமம்’ நம் நினைவுகளில் இருந்த நம் பாட்டி ஊருக்கு மீண்டும் அழைத்துச் செல்வது போன்ற உணர்வைக் கொடுத்தது. ’பேட்டைக்காளி’ நம் இரத்தமும் வியர்வையும் கலந்த தமிழின் பெருமையைக் கூறுவதாகும். சுவாரசியமான முன்மாதிரியைக் கொண்ட இந்தக் கதை பற்றி விரைவில் தமிழ் பார்வையாளர்கள் தெரிந்து கொள்வார்கள்,” என்றார்.
இயக்குனர் ராஜ்குமார் பேசுகையில்,
“முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். அதன் பிறகு காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் அவர்கள் விவசாயத்தையும் காளைகள் வளர்ப்பது குறித்தும் கற்றுக் கொண்டனர். எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதி காலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
Tags: Pettaikaali, Vetri Maaran, La Rajkumar, Santhosh Narayanan, Kalaiyarasan, Aha Tamil