‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
24 Feb 2026
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
நியோ கேசில் கிரியேஷன்ஸ் சார்பாக சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பாக யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படைப்பு, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கிறது.
படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் வரும் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்க உள்ளது. வெளியீட்டு தேதியும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
Tags: pari ilavazhagan
