தமிழ்ப் படங்களில் மட்டும் நடிக்க அஜ்மல் முடிவு...
18 May 2015
“திரு திரு துறு துறு, அஞ்சாதே , கோ” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர். தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று பிசியாகிவிட்டார் .
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மீண்டும் மலையாளப் படவுலகிற்கு போனவர் மோகன் லாலுடன் சேர்ந்து ஒரு படத்தில் தமிழனாக நடித்திருக்கிறார் .
இப்படி முன்று மொழிகளிலும் நடித்து வருபவருக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கவே அதிக ஆசையாம். இதற்காகவே மலையாளம், தெலுங்குப் படங்களுக்குக் கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழ்ப் படங்களில் நடிக்க கவனம் செலுத்தப் போகிறாராம். அதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து வந்துள்ளார். கதைகளையும் கேட்க ஆரம்பித்து விட்டாராம்.
இனி தமிழில் ஒரு நல்ல இடத்தைப் பெறும் வரை தமிழ்ப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்கிறார். இதற்காக தன்னைத் தேடி வந்த ஒரு ஹிந்திப் பட வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.

