12 ஆண்டுகளுக்குப் பிறகு சிற்பி இசையமைக்கும் ‘முடக்கறுத்தான்’

11 Sep 2021

வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபல சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘முடக்கறுத்தான்’. கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் சிற்பி, பாடலாசிரியர் பழனி பாரதி இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை ஆகாஷ், சண்டைப் பயிற்சியை சூப்பர் சுப்பராயன் மேற்கொள்கிறார்கள் . 

இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

நிகர்ச்சியில் நடிகர், இயக்குனர் வீரபாபு பேசுகையில்,

சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம்  உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்துச் சொல்கிறேன், இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது, 

இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களைக் காப்பற்றிய மருத்துவர்  என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன். ஒரு நாள் சந்திப்பின் போது கதையை பற்றி வீரபாபு சொன்னார். இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை, அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார், கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.

நடிகர் மயில்சாமி பேசுகையில், 

இந்த படத்தில் நான் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தை ஏற்று  நடித்துள்ளேன். ஒரு குடிகாரனை எப்படி திருத்துவது என்ற ஒரு நுணுக்கமான முறையை சொல்லியுள்ளார் வீரபாபு.

தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி பேசுகையில்,

நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரைக் காப்பாற்றிய வீரபாபு இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரித்திருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் .

பாடலாசிரியர் பழனி பாரதி பேசியதாவது, 

இந்த கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் வீரபாபு, மனித நேயம் மிக்கவர். குழந்தை கடத்தல் என்பது இன்று பயங்கரவாதமாக உள்ளது. குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள். அதனை கண்டிக்கும் விதமாக சிறந்த கதையை வீரபாபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரும் நான்கு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக அமையும் என்பது உண்மை. இப்படத்தில் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களைக் கேட்டால் கண்களில் கண்ணீர் கசியும்.

இசையமைப்பாளர் சிற்பி பேசுகையில்,

விநாயகர் சதுர்த்தி அன்று  இந்த  படத்தின் டீசர் வெளியாவது இறைவனின் ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளேன். இந்த வாய்ப்பினை தந்த இயக்குனர் வீரபாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வீரபாபு அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மனித நேயம் உள்ளவர். வீரபாபு சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகை  மஹானா பேசியதாவது,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகை நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில் சிறப்பாக நடித்துள்ளா, குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

Tags: mudakkaruthan, sirpy, veerababu, mahana

Share via: