ஜெய் பீம் - பார்க்க 5 காரணங்கள்...

27 Oct 2021

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’. 

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படம் நீதிமன்றம் சார்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான ஒரு கதை என்பதை சமீபத்தில் வெளியான டிரைலர் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உண்மையைக் வெளிக்கொணர வழக்கறிஞர் சந்துரு தனது அயராத முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இத்தகைய சக்தி வாய்ந்த கதையம்சமே போதும், ஜெய் பீம் படத்தைத் தவறவிடக் கூடாது என்பதை உணர்த்த.... ஆனால் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் இன்னும் 5 காரணங்கள் இருக்கின்றன.

  • புதிய அவதாரத்தில் சூர்யா...

ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்ட சூர்யா அதன் பின்னர் பாக்ஸர், தொழில் முனைவர் என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை திரையில் வரும்போதும் அவர் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். ஜெய் பீம் டிரைலரில் சூர்யாவை, ஒரு பன்முகத் தன்மை கொண்ட நடிகராக அழுத்தமான வழக்கறிஞராகப் பார்க்க உள்ளோம். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக எந்த அளவுக்கும் அவர் செல்வார் என்பதை இக்கதாபாத்திரத்தின் மூலம் அறிய முடியும். ஆழமான நடிப்பு, அனல் பறக்கும் வசனம் என அசத்தியிருக்கிறாராம். இந்த புதிய கதாபாத்திரத்திலும் அவர் ரசிகர்களின் நெஞ்சை அள்ளுவார் என்பது நிச்சயம்.

  • சிறப்பான நட்சித்திரங்கள்...

படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். ஒரு நல்ல கதை பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதை கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். டிரைலரைப் பார்க்கும் போதே நடிகர்கள் தங்கள் உழைப்பை முழுவீச்சில் பாய்ச்சியிருப்பதைக் காண முடியும்.

  • கேமராவுக்குப் பின்னால் அசாத்திய திறமை...

படத்தின் முதல் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை கேமராவின் மாய வித்தை நம்மைக் கட்டிப்போடும். இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளவர் த.செ.ஞானவேல். இவர் பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர். சூர்யாவின் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கெடல் செய்துள்ளார். அவருடன் கேமராவைக் கையாண்டிருக்கும் எஸ்.ஆர்.கதிர் ஒரு சிறப்பான ஒளிப்பதிவாளர். இசையமைப்பாளர் ஷான் ரால்டன், எடிட்டர் ஃபிலோமின் ராஜா என அனைவருமே உண்மையின் மாண்பை சொல்லும் இந்தப் படத்திற்கு மெருகேற்றி உள்ளனர்.

  • உணர்வுகளைத் தூண்டும் இசை...

ஜெய் பீம் படத்தின் முதல் பாடலான ‘பவர்’ பாடலை அறிவு  பாடியிருக்கிறார். பாடலுக்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். அதிரடி பாடலான இது அனைவரையும் தாளம் போட்டு ஆட வைக்கும். ‘தல கோதும்’ என்ற இரண்டாவது பாடல், பிரதீப் குமாரால் பாடப்பட்டுள்ளது. ராஜூ முருகன் எழுதியுள்ளார். மென்மையான மெலடிப் பாடலாக இது இதயத்தை வருடும். நீதிக்கான பயணத்தை நம் கண் முன்னே நிறுத்தும். இந்த இரண்டு பாடல்களும் மிகவும் அழுத்தமானவையே.

  • பரபரப்பான நீதிமன்ற காட்சிகள்...

நீதிமன்றக் காட்சிகளைக் காண்பதில் எப்போதுமே திரை ரசிகர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். அதுவும் அழுத்தமான நீதிமன்றக் காட்சிகள் என்றால் கேட்கவா வேண்டும். ஜெய் பீம் படத்தில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயான வாத, விவாதங்கள் நீதிமன்ற அறைக் காட்சிகளாக ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. டிரைலரில் நாம் பார்த்த போது ஏற்பட்ட தாக்கம் படம் முழுவதுமே நமக்கும் ஏற்படும். ரசிகர்களை நிச்சயமாக சீட்டின் நுணியில் அமரவைத்து பார்க்க வைக்கும்.

ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர்.  'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. 

நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது. 

Tags: jai bhim suriya, tha se gnanavel, sean roldan

Share via: