குறைந்த விலைக்கு விற்பனையான ‘கோட்’ தமிழக உரிமை

01 Jul 2024

முந்தைய படங்களை விட குறைந்த விலைக்கு ‘கோட்’ தமிழக உரிமை விற்கப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி செளத்ரி, சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கிராபிக்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றாக இறுதிச் செய்யப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருப்பதால், ‘கோட்’ படத்தின் உரிமைகளை விற்கத் தொடங்கியிருக்கிறது படக்குழு. இதன் தமிழக உரிமையைக் கைப்பற்ற பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.

இது குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, “’கோட்’ படத்தின் தமிழக உரிமையை 75 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். இது ஒப்பந்தமாக கையெழுத்தாகிவிட்டது. ஆனால், இது முந்தைய விஜய் படங்களை விட குறைந்த விலை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது உள்ள திரையரங்க சூழல், வியாபாரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த விலைக்கு கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறோம்” என்று தெரிவித்தார்கள்.

‘கோட்’ படத்தினை முடித்துவிட்டு சிறிய ஓய்விற்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் கொடுத்திருக்கிறார் விஜய்.

Tags: vijay, goat

Share via: