என்னுடன் ஜோடியாக நடிக்க யாரும் வரவில்லை - பிரேம்ஜி

Release Date:07 Sep 2015
இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ள ‘மாங்கா’ படம் இன்னும் சில நாட்களில் வெளிவந்துள்ளது. இதற்கு முன் அவர் நாயகனாக நடிக்க ஆரம்பமான ‘பாக்யராஜ் 2010’ படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது ‘மாங்கா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படம் பற்றி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேம்ஜி பேசியதாவது, “நானும், என்னுடன் ‘சென்னை 28′ படத்தில் நடித்த நண்பர்களும் ஒரு பந்தயம் வைத்தோம். எங்களில் யார் முதலில் ஸோலோ ஹீரோ ஆவது என்பதுதான் பந்தயம். என்னைத்தவிர அனைவருமே ஸோலோ ஹீரோவாகிவிட்டார்கள். நான்தான் கடைசியாக இந்த படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறேன். நான் ஹீரோவாக நடிக்க 9 வருடம் ஆகியிருக்கிறது. என்னுடைய முகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள காரணம் எனது அண்ணன் வெங்கட்பிரபு தான்.அவன் இயக்கும் பெரிய நாயகர்களின் படங்களில் என்னை நடிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட்டான். அவன் இல்லையென்றால் நான் ஹீரோ இல்லை, ஜீரோதான். ‘மாங்கா’ படத்தில் 2015 ல் வரும் விஞ்ஞானியாகவும், 1950ல் வரும் பாகவதராகவும் நடித்திருக்கிறேன்.இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபலமான பல முன்னணி ஹீரோயின்களை அணுகினார்கள். ஆனால், அவர்களெல்லாம் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்கள். அவர்களை நான் சும்மாவிட மாட்டேன். நான் கதாநாயகனாக நடித்து பெரிய ஆளாக ஆனவுடன் என் படங்களில் எனக்கு அக்கா, அம்மா வேடத்தில் நடிக்க வைத்து அவர்களை பழிவாங்குவேன்,” என்றார் பிரேம்ஜி. ‘மாங்கா’ படம் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது.

Share via: