Maanagaram

Release Date:10 Mar 2017
திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்டர்வியூக்காக வருகிறார் ஸ்ரீ. இன்டர்வியூ முடிந்து வீடு திரும்பும் போது ஆள் மாறாட்டத்தால் அவரை யாரோ நன்றாக அடித்துவிட்டு, அவருடைய படிப்புச் சான்றிதழ்கள் உள்ள பையையும் பிடுங்கிச் சென்று விடுகிறார்கள். மறுநாள் நடந்தவற்றை அலுவலகத்தில் சொல்வதற்காக பேருந்தில் பயணிக்கும் போது, சந்தீப் அவருடைய காதலி ரெஜினாவைப் பற்றி தவறாகப் பேசியவன் மீது ஆசிட் வீசும் முயற்சியில் இருக்கிறார். அப்போது அந்த ஆசிட் பாட்டிலை கை மாற்றி கொடுத்ததற்காக ஸ்ரீ போலீசிடம் சிக்கிக் கொள்ள, சந்தீப் தப்பி விடுகிறார். காவல் நிலையத்திற்கு வெளியிலேயே சந்தீப்பின் நண்பன் ஒருவனை ஸ்ரீ அடையாளம் கண்டு, அவனை போலீசிடம் சிக்க வைத்து அவர் அலுவலகம் செல்கிறார். ஸ்ரீயை இன்டர்வியூ செய்த ரெஜினாவைத்தான் சந்தீப் காதலிக்கிறார் என்பது ஸ்ரீக்குத் தெரிய வருகிறது. அதே அலுவலகத்தில் இன்டர்வியூக்கு வரும் சந்தீப்பை போலீஸ் பிடித்துச் சென்று விடுகிறது. இதனிடையே, சென்னையின் பிரபல தாதாவான மதுசூதனின் மகனை ஸ்ரீயை முதலில் அடித்தவர்கள் கடத்தி வைத்துக் கொண்டு தாதாவிடமே 1 கோடி ரூபாய் வேண்டுமென கேட்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் மதுசூதனின் மகன் எப்படியோ சந்தீப், ரெஜினாவிடம் வந்து சேர்கிறான். அந்தப் பையனை சந்தீப், மதுசூதனனிடம் ஒப்படைக்கச் செல்லும் வழியில் போலீஸ் விசாரிக்க, இன்ஸ்பெக்டர் சித்தப்பாவிடமே அந்தப் பையனை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார். ரெஜினாவின் தயவால் எப்படியோ வேலையில் சேரும் ஸ்ரீ முதல் நாள் வேலை முடிந்து, சென்னைக்கு புதிதாக டிரைவர் வேலைக்கு வந்துள்ள சார்லியின் காரில் நண்பனின் ரூமிற்குச் செல்கிறார். இருவருக்குமே வழி தெரியாத காரணத்தால் எங்கெங்கோ சுற்றுகிறார்கள். மதுசூதனனின் மகனை கடத்தி வைத்து தங்களிடமே அவன் இருப்பதாக நாடகமாடிக் கொண்டிருக்கும் கடத்தல் கும்பலிடம் சார்லியும், ஸ்ரீயும் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள்தான் தன்னை முந்தின நாள் இரவில் அடித்தவர்கள் என்பதை ஸ்ரீ தெரிந்து கொள்கிறார். ஒரு பக்கம் கடத்தல் கும்பலிடம் மீண்டும் சிக்கிக் கொள்ளும் ஸ்ரீ, கடத்தப்பட்ட மகனைத் தேடி வரும் தாதா, மீண்டும் காதலியைச் சந்திக்க வரும் வழியில் கடத்தப்பட்ட தாதா மகனை வைத்து கடத்தல் நாடகமாடும் இன்ஸ்பெக்டர், அதைக் கண்டு அந்தப் பையனைக் காப்பாற்றத் துடிக்கும் சந்தீப் என அனைத்து சம்பவங்களும் ஒரு முடிவில் வந்து நிற்கின்றன. அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.

Share via: