மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'.
இப்படத்தை ‘ரோஜா மலரே, அடடா என்ன அழகு’ படங்களை இயக்கியவரும், ‘சிந்துபாத்’ படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.
இப்படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றும் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெரைரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது
“இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது.
அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்த போதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான் தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம். அதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.
படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்க இருக்கிறோம்.
கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்தக் காட்சிகளை நடிக்கத் தயங்குவார்கள். அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்.
அது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம், அதுவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக நிச்சயம் நடிப்பார்.
500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை பிரம்மாண்டமாக அண்மையில் படமாக்கினோம். கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. ஓடிடி தளங்களில் இருந்து பேசினாலும், படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்,” என்கிறார் படத்தின் இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன்.
ஒளிப்பதிவு - ஒய்.என்.முரளி
பிண்ணனி இசை, எடிட்டிங் - அலிமிர்சாக்
கலை இயக்கம் – சோலை அன்பு
நடனம் - கூல் ஜெயந்த்
ஸ்டண்ட் – கிக்காஸ் காளி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு நிர்வாகம் - அப்பு
கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள், இசை, இயக்கம் - டி.எம்.ஜெயமுருகன்