ஜீ தமிழ் டிவியில் ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இரண்டு முதன்மை நேர தொடர்கள் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ மற்றும் ‘சத்யா’.
இந்த இரண்டு தொடர்களும் இணைந்த ஒரு சங்கமத்தை வரும் ஜனவரி 9 முதல் 21 வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்ப உள்ளார்கள்.
‘சத்யா’ நெடுந்தொடர் 2021 ஜனவரி 8ஆம் தேதியுடன் 500 எபிசோடுகளை நிறைவு செய்கிறது. அந்த சாதனையை இப்படி ஒரு சங்கமக் கொண்டாட்டத்துடன் கொண்டாடுகிறார்களாம்.
‘சத்யா’ தொடரில், அனிதாவின் தேவையற்ற தலையீடு மற்றும் குடும்பத்தில் ஏற்படும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக சத்யா மற்றும் பிரபு ஆகியோருக்கு இடையேயான உறவு பாதிக்கப்படுகிறது. தங்களது திருமண வாழ்வின் புத்தாண்டுப் பயணத்தைத் தொடங்கும் நிலையில், ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரின் ராசாத்தி மற்றும் இனியன் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே அவர்களது காதலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.
‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரில், தனது மாமியாருக்கு எதிராக ஊராட்சி மன்றத் தலைவி பதவிக்குத் தேர்தலில் போட்டியிடுகிறார் ராசாத்தி. அதில் ஏற்படும் பல்வேறு தடைகளைச் சந்திக்கிறார். சத்யாவும், பிரபுவும், உண்மையான நட்புக்கு அடையாளமாக பிரச்சாரத்தின் போது ராசாத்திக்கு இறுதிவரை உதவுகிறார்கள்.
இப்படி இரண்டு தொடர்களின் கதைகளையும் இணைத்து விறுவிறுப்பை மேலும் கூட்டியுள்ளார்களாம்.
தங்களது பிரபல தொடர்களின் இணைந்த சங்கமங்களை ஜீ தமிழ் ஏற்கெனவே வெற்றிகரமாக ஒளிபரப்பி உள்ளது.
தென்னிந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக ‘இரட்டை ரோஜா’, ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘ராஜா மகள்’ ஆகிய மூன்று நெடுந்தொடர்களின் இணைந்த ‘திரிவேணி சங்கமத்தை’ சமீபத்தில் இரு வாரங்களுக்கு மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பினார்கள்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த ‘மகாசங்கமத்தை’ ஒளிபரப்ப உள்ளார்கள்.