வெப் தொடராக உருவாகும் ‘லட்சுமிகாந்தன்’ கொலை வழக்கு

தமிழ் ஓடிடி தளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றான ‘சோனி லிவ்’ தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘தி மெட்ராஸ் மர்டர்‘ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் விஜய் ஷோ ரன்னர் ஆக செயல்பட உள்ளார். 

மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

1940-களில் பிரபலமான ஒரு பத்திரிகையாளர் என்றும், அந்த கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1944-ஆம் ஆண்டு மெட்ராஸ் புரசைவாக்கத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யபட்ட பிரபல மஞ்சள் பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தனின் கொலை வழக்கு மற்றும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்ற தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் தொடர்பு பற்றிய கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு இது.

இன்று வரை லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் இருக்கிறன. மேலும், லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார் என்பது இன்று வரை விடை தெரியாத புதிராகவே உள்ளது. இந்த வெப் தொடர் அந்த புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த வெப் தொடருக்கான முன்தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.