தமிழில் உள்ள பிரபல யு டியூப் சேனல்களில் ஒன்று ‘நக்கலைட்ஸ்’. அந்த சேனலில் இடம் பெற்றுள்ள பல வீடியோக்கள் இளைஞர்களைக் கவரும் விதத்தில் உள்ளவை.
அதில் ஒளிபரப்பான ஒரு தொடர் ‘அம்முச்சி’. அத்தொடரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் இணைய ரசிகர்கள் பலர் பார்த்து ரசித்தனர். அத்தொடரின் இரண்டாவது சீசன் ‘அம்முச்சி சீசன் 2’ மீண்டும் வர உள்ளது. இந்த சீசனில் 8 அத்தியாயங்கள் இடம் பெற உள்ளன. ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக் கூடியவை.
ஒரு கண்டிப்பான கிராமப்புற தந்தை மாகாளி, ஒரு ஆடம்பரமான கிராமப்புற வில்லன் மசநாய் மணி, படிப்பின் மீதான உண்மையான ஆர்வம் கொண்ட ஒரு கிராமப்புற பெண், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான போராடும் ஒரு நாயகன் என இந்த முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பின்னணியில் கதை நகர்கிறது.
இதன் திரைக்கதை கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் கிராமத்து உணர்ச்சிக் கலவையை யதார்த்தமாக அணுகுவதோடு, ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டிருக்கும்.
அம்முச்சியைப் பார்ப்பது கிராமங்களில் கோயில் திருவிழாவிற்குச் செல்வது போன்ற ஒரு அனுபவமாக இருக்கும், இது மக்கள் ஒன்றாகக் கூடுவதையும் அவர்களுக்குள் பிணைப்பபு உருவாவதையும் காட்டும்.
ஒரு திருவிழா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், சிறிய கடைகள் மற்றும் அந்தக் கடை விற்பனையாளர்களைச் சுற்றியுள்ள குழந்தைகள் என கிராமப்புற வாழ்வை கண்முன் காட்டும்.
அம்முச்சி சீசன் 2 தொடரை ராஜேஷ் காளிசாமி இயக்கியுள்ளார். பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நட்சத்திரக் குழுவில் அருண், சசி, மித்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் மற்றும் சின்னமணி டைட்டில் ரோலில் அம்முச்சியாகவும் நடிக்கின்றனர்.
செல்லதுரை ஆக பிரசன்னா பாலச்சந்திரன், மாகாளியாக சந்திரகுமார், மசநாய் மணியாக ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் நடிக்க ஸ்ரீஜா, தனம், சாவித்திரி, முத்தமிழ், மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விவேக் சரோ இசையமைப்பாளராகவும், கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகவும், சந்தோஷ் குமார் ஒளிப்பதிவும் செய்கிறார்கள்.
‘அம்முச்சி சீசன் 2’ ல் டிரம் அடிக்கும் போட்டி, கிளாசிக் ரேக்ளா ரேஸ், சிலம்பம் போட்டி, பாரம்பரிய மல்யுத்தப் போட்டி மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய கூடுதல் சிறப்புக்கள் உள்ளது.
இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு ஒரு கிராமத்தின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் அழகான மற்றும் யதார்த்தமான வாழ்வியலை வழங்கும்.
குறிப்பாக, கிராமங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களை, தங்கள் சொந்த அனுபவத்தை உணர வைக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும். எளிமையான சொற்களில் சொல்வதானால், இது அவர்களின் கடந்த கால நினைவுகளை மீளுருவாக்கம் செய்து பார்ப்பதாக இருக்கும் என்கிறது நக்கலைட்ஸ் குழு.