கட்சியினருக்கு கடும் நிபந்தனைகளை விதித்த விஜய்

25 May 2024

தனது கட்சியினருக்கு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளார் விஜய்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தினை முடித்துவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக மாறவுள்ளார் விஜய். இதற்காக தனது கட்சியை வலுவாக காலூன்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கட்சியில் பல்வேறு அணிகளை உருவாக்குவது, மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் என தொடர்ச்சியாக படப்பிடிப்புக்கு இடையே கவனித்து வருகிறார்.

இதனிடையே, ‘கோட்’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கட்சியினர் செயல்பாடு குறித்த அறிக்கை ஒன்று விஜய்யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சமூக வலைதளத்தில் தனது கட்சியினரின் செயல்பாடு, யூடியூப் தளத்தில் கட்சி சார்பில் பேசுபவர்களின் செயல்பாடு என நிறைய விஷயங்கள் இடம்பெற்றிருந்தது.

இதனை முழுமையாக பார்த்துவிட்டு, கட்சியினருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் விஜய். ரசிகர்களாக இருந்து பிரச்சினையில்லை, கட்சிக்குள் வந்துவிட்டால் பேச்சில் பொறுப்பு, தெளிவு மிகவும் முக்கியம். இப்போதைக்கு கட்சி சார்பில் பேட்டிகள் அளிக்க நியமிக்கப்பட்ட அனைவரையும் இனிமேல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டாரம் விஜய்.

அதே போல், கட்சி சார்பில் சமூக வலைதளத்தில் இயக்குபவர்கள் யாரும் மற்ற கட்சியினை திட்டுவது, எதிரான கருத்துகளை தெரிவிப்பது என எதிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஜுன் 4-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கட்சி சார்பில் அடுத்த நகர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் சார்பில் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: vijay

Share via: