டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய்தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படத்தைத் தமிழில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. 

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘உயிரே...’ என்ற பாடலை படத்தின் இயக்குனர் ராஜமௌலி நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இந்த விழாவில் இயக்குனர் ராஜமெலி, லைக்கா சார்பில் தமிழ்க்குமரன், டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் தானய்யா, தயாரிப்பாளர் என்வி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்குமரன் பேசகையில்,

“பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைவது எங்களுக்குப் பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘ஆர்ஆர்ஆர’ இருக்கிறது. இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம்,” என்றார்.

டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் சார்பில் தயாரிப்பாளர் தானய்யா பேசியதாவது..

“இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம்,” என்றார். 

இயக்குநர் ராஜமௌலி பேசுகையில்,

“சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை  சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப் பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம். 

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் மிகப் பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்குப் பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல். 

அண்ணன் மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்குத்தான் இசையமைப்பார். அப்படி ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப் பாடல் கேட்ட போதே கண்ணீர் சிந்தி ரசித்தார். அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்குக் காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி,” என்றார்.