அனைவரும் சமம் என சொல்ல வரும் ‘பராரி’

29 Aug 2024

இயக்குநர் ராஜு முருகன் வழங்க, எஸ்.பி சினிமாஸ் சார்பில் ஹரி சங்கர் தயாரிக்க, எழில் பெரியவேடி இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைக்க, ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் மற்றும் 40 புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள படம். அவர்கள் அனைவருமே பி.எச்டி படித்தவர்கள்.

சாதியக் கருத்துக்களை சொல்லி வரும் படங்களுக்கு மத்தியில் மனிதம் பற்றி பேச வந்துள்ள படம் இது என்கிறார் படத்தின் இயக்குனர் எழில் பெரியவேடி.

படம் பற்றி இயக்குநர் எழில் பெரியவேடி பேசுகையில்,

“ராஜு முருகன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். ‘ஜிப்ஸி’ படம் முடியும் போது இந்தக் கதையை நான் முடித்துவிட்டேன். சில நிறுவனங்களில் கதை சொன்னேன், கதையைக் கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியைக் கேட்டுவிட்டு பயந்து விடுவார்கள். இப்படியான கிளைமாக்சில் எந்த நடிகரும், நடிகையும் நடிக்க மாட்டாங்க, என்று நிராகரித்து விடுவார்கள்.

இப்படி பலரிடம் கதை சொல்வேன், அவர்களும் கிளைமாக்ஸ் காட்சியைக் கேட்டு பயந்து விடுவார்கள். இப்படியே போனதால் எனக்கே என் கதை மீது சலிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் சினிமாவை விட்டே போய் விடலாம் என்று முடிவு செய்து என் இயக்குநரிடம் கூறினேன். அவர் பதற்றமடைந்து வேண்டாம் என்று சொன்னதோடு, இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன், என்று கூறினார். அப்படித்தான் ‘பராரி’ தொடங்கியது.

வட தமிழகத்தில் இருக்கும் இரண்டு விளிம்புநிலை சமூக மக்களிடையே இருக்கும் அரசியலை தான் இந்தக் கதை முன் வைக்கிறது. வட தமிழகம் பற்றி இதுவரை சொல்லாத அரசியலைச் சொல்லியிருக்கிறேன். இரண்டு சமூகமாக இருப்பவர்கள் ஒரே குலசாமியை வணங்குகிறார்கள், இது தான் அங்கிருக்கும் மிகப்பெரிய அரசியல். இருவரும் தினக்கூலியாக தான் இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது இவர்களிடம் ஏற்றத் தாழ்வு எப்படி வந்தது ? என்ற கேள்வியை முன் வைப்பதோடு, திராவிட நாடு அரசியலையும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறேன்.

திராவிட நாடு அரசியல் என்பது திராவிட அரசியல் இல்லை, மொழி வாரியாகப் பிரிந்து கிடக்கும் திராவிட நாடு அரசியல். மொழி வாரியாக திராவிட நாடுகள் பிரிந்திருந்தாலும், அதன் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது அவர்களை வேற்று மொழி பேசுபவர்களாக பார்ப்பதோடு, அவர்களை எப்படி நடத்துகிறார்கள், அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது, என்பதைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.


டீசரில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நடக்கும் பிரச்சனை போல் காட்சிகள் இருக்கலாம், ஆனால் படம் அதைப்பற்றி மட்டும் பேசவில்லை, அதைத் தாண்டிய மனிதத்தை பற்றி பேசும். ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமூகத்தினரை குறை சொல்வது போல் காட்சிகள் இருக்காது, தவறு செய்பவர்களை குத்திக்காட்டுவதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை, அனைவரையும் நேசிக்க வேண்டும், அனைவரும் சமம், நீ பெரியவன் நான் பெரியவன் என்று பார்க்கக் கூடாது, தமிழ் மரபுகளில் இருந்து தான் உயிரினம் உருவானது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள், அப்படிப்பட்ட தமிழ் சமூகம், மேலே கீழே என்று பார்க்காமல், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் இந்தக் கதை.

இந்தப் படத்தை பார்த்து ஒரு சமூகம் திருந்திவிட்டது அல்லது சிலர் திருந்திவிடுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு கதை இருக்கும். படத்தில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவதோடு, அனைவரையும் யோசிக்க வைக்கும். 20 நிமிட கிளைமாக்ஸ் இதுவரை எந்தப் படத்திலும் வராத கிளைமாக்ஸாக இருக்கும். படம் முடிந்து வெளியே வரும் போது கண்கலங்கியபடிதான் வருவீர்கள். நான் சொல்வது உங்களுக்குக் கொஞ்சம் அதிகமாக தோன்றாலாம்.

‘ஒரு படைப்போ, கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ, நாவலோ படிக்கும் போது உங்கள் மனதை சலனப்படுத்தவில்லை என்றால் அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்”, என்று அருந்ததி ராய் சொல்லியிருப்பார், அது போல் என் படம் உங்களை 10 நிமிடமோ அல்லது ஒரு நாளோ உங்கள் மனசாட்சியைக் கேள்வி கேட்கவில்லை என்றால், என் படத்தை குப்பையில் போட்டு விடுங்கள்.

நான் ஒரு அமைப்பில் இருக்கிறேன், அதன் மூலம் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன், அப்போது நான் பார்த்த சம்பவங்கள் தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் இருக்கும் பெருபாலான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை. இந்த படத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவில்லை, எந்த குறியீடுகளையும் வைக்கவில்லை. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல், அவர்களிடம் இருக்கும் அரசியல், அவர்கள் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி பராரிகளாக செல்லும் போது அவர்கள் எதிர்கொள்ளும் அரசியலைத்தான் இந்தப் படம் பேசுகிறது.” என்றார்.

‘தோழர் வெங்கடேசன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த ஹரிசங்கர், இப்படத்தை அவரே தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.


படம் பற்றி அவர் பேசுகையில்,

‘பராரி’ படத்தின் கதை மிகச் சிறப்பானதாக மட்டும் இன்றி எனக்கு பொருத்தமானதாகவும் இருந்தது. படத்தில் இடம் பெறும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன், அதனால் தான் இந்தக் கதையில் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. இந்த கதைக்காக நான் என் உடல் எடையை குறைத்திருக்கிறேன். 100 கிலோவாக இருந்த நான் 44 கிலோவாக உடல் எடையைக் குறைத்து நடித்திருக்கிறேன்.

உடல் எடையைக் குறைத்து கூலி வேலை செய்யும் ஒரு இளைஞர் போல இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடங்குவேன், என்று இயக்குநர் சொல்லிவிட்டார். அதன்படி நான் உடல் எடையை குறைக்க முயற்சித்தேன். ஆனால், சென்னையில் இருந்து கொண்டு உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டால், அதை எளிதில் செய்ய முடியாது, என்பதால் படப்பிடிப்பு நடக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கே சென்று அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்து, கரும்பு வெட்டுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என்று ஒரு கூலித் தொழிலாளியாகவே இருந்து உடல் எடையைக் குறைத்து, என் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தேன்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில்,

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு 9 படங்களில் பணியாற்றி விட்டேன், அதன் பிறகு நான் எதிர்பார்த்த கதை எனக்கு அமையவில்லை. கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், அவை நம்மை ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா, அப்படி எந்தக் கதையும் எனக்கு அமையாததால் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் எழில் என்னை தொடர்பு கொண்டு இந்தக் கதையை கேளுங்கள் என்றார். அதற்கு முன்பு அவரை எனக்குத் தெரியாது, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது. அவர் அனுப்பிய கதையை படித்த போது, என்னை ஒரு மாதிரி செய்துவிட்டது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ஏசி அறையில் எனக்கு வியர்க்கும் அளவுக்கு பதற்றத்தைக் கொடுத்துவிட்டது, அந்த அளவுக்கு இந்தக் கதை என்னை உலுக்கியது, அதனால் இதில் பணியாற்றினேன்.

‘பரியேறும் பெருமாள்’ போல் தமிழ்நாட்டில் சாதி அரசியலை வைத்து நிறைய படங்கள் வருகிறது. ஆனால், அதைத் தாண்டி மொழி, மதம், கார்ப்பரேட் ஆகியவற்றில் இருக்கும் அரசியலைத்தான் இந்தப் படம் அழுத்தமாகப் பேசுகிறது. குறிப்பாக மாநிலம் மற்றும் மத்திய அரசியலைத் தழுவி இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு சினிமாவில் சாதி படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள். ஒரு சமூகத்தினரை தாழ்த்திப் பேசுவதோ அல்லது ஒரு சமூகத்தை பெருமையாக பேசுவதாகத்தான் சாதி படங்கள் இருக்கிறது. ஆனால், இந்தப் படம் முதலில் மக்கள் மன ரீதியாகத் திருந்த வேண்டும், பிறகு பொருளாதார ரீதியான மாற்றங்கள், முன்னேற்றங்கள் தானாக வரும் என்பதை வலியுறுத்துகிறது.

நான் இதுவரை 9 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன், பல பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இதுவரை எந்த படத்திற்காகவும் இவ்வளவு பேசியதில்லை. ஆனால், இப்போது இவ்வளவு பேசுகிறேன் என்றால் இந்தக் கதை தான் காரணம்.

இந்தப் படத்தில் இருக்கும் புதுமுகங்களை எடுத்துவிட்டு பிரபலமான சில நடிகர்களை நடிக்க வைத்திருந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் சிறந்த படமாக மட்டும் இன்றி, திரையரங்கில் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் நல்ல படமாகவும் இருக்கும்.

120 ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள், படம் முடிந்த பிறகு கூடுதலாக 120 ரூபாய் கொடுக்க தயாராக இருப்பார்கள், அந்த அளவுக்கு தியேட்டருக்கான படமாகவும் ‘பராரி’ இருக்கும். இதை நான் இப்போது சொல்லவில்லை, 2021 ஆம் ஆண்டே என் சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லியிருக்கிறேன். படம் பார்த்த பிறகு நான் சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால், என் பதிவை நீக்கச் சொல்லுங்கள், தாராளமாக நீக்கி விடுகிறேன்,” என்றார்.

Tags: paraari

Share via:

Movies Released On September 14