ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும் ‘சிரஞ்சீவி தோசை’...
22 Aug 2015
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி இன்று அவருடைய 60வது பிறந்த நாளை வெகு விமரிசயைகக் கொண்டாடி வருகிறார்.
நேற்று ஹைதராபாத்தில் அவருடைய ரசிகர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிரஞ்சீவி கலந்து கொண்டு ரசிகர்களுடன் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இன்று இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை அழைத்து தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார்.
இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் மிகப் பெரும் விருந்தும் நடைபெற உள்ளது.
அந்த விருந்தில் ‘சிரஞ்சீவி தோசை’ என்பது மெனுவில் ஒரு ஸ்பெஷல் ஐயிட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சிரஞ்சீவி வீட்டுக்குச் சென்றால் அந்த தோசையை விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்களாம்.
சிரஞ்சீவி வீட்டில் மட்டுமே அப்படிப்பட்ட ருசியான தோசை கிடைப்பதால்தான் அந்த தோசைக்கு சிரஞ்சீவி தோசை என்று பெயராம். சிரஞ்சீவி வீட்டில் தலைமை சமையல்காரர், இன்று விருந்த நடக்க உள்ள ஹோட்டலின் செஃப்களுக்கு அந்த ‘சிரஞ்சீவி தோசை’யை எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளாராம்.
இன்று இரவு நடைபெற உள்ள விழா மற்றும் விருந்து நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி, சல்மான் கான் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.