'நீ சுடத்தான் வந்தியா' படத்திற்கு ' A' சான்றிதழ்
29 Sep 2021
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அதை தணிக்கை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் எட்டு பேர் கொண்ட குழுவுக்கு படம் அனுப்பப்பட்டது. இறுதியில் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இப்படத்தில் கதாநாயகனாக அருண்குமார் நடிக்க கதாநாயகியாக டிக் டாக் புகழ்இலக்கியா நடித்திருக்கிறார்.
அருண்குமார் படம் பற்றி கூறுகையில்,
" படப்பிடிப்பில் இருந்த போது கூட நாம் தான் படம் எடுக்கிறோமா என என்னால் நம்ப முடியவில்லை. நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நான் தயாரிப்பாளர் என்பதால் நடிக்க விரும்பவில்லை. பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்த பின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு முன்தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன், பிறகுதான் நடிக்க வந்தேன். எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார். இயக்குநர் சொன்னபடி நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்,” என்றார்.
' டிக் டாக்' புகழ் இலக்கியா படம் பற்றி பேசிய போது,
"இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது .
உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒரு வழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும், என்னையும் வாழ்த்த வேண்டும்," என்கிறார்.
படத்தில் இயக்குநர் துரைராஜ், ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ், இசையமைப்பாளர் துரைராஜன், பாடலாசிரியர் லோகேஷ் என ஆர்வமுள்ளவர்கள் இணைந்திருக்கிறார்கள்.
படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. கதாநாயகி இலக்கியா பற்றி ஆயிரம் விமர்சனங்கள் பேசப்பட்டாலும் சமூக ஊடகங்களில் பலவாறாகச் சீண்டப்பட்டாலும் படக்குழுவினருக்கு அவர் தந்த ஒத்துழைப்பைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அவர் தனது கடமையைச் சரிவரச் செய்தார் என்று கூறுகிறது படக்குழு.
விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
Tags: nee sudathaan vandhiya, tik tok ilakkiya, jaquar thangam, arunkumar