தேசிய விருதுகளுக்கு நன்றி சொன்ன ‘அசுரன்’ படக்குழு

24 Mar 2021

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தமிழ் படமாக ‘அசுரன்’ படமும், சிறந்த நடிகருக்கான அப்படத்தில் நடித்த தனுஷுக்கும் அறிவிக்கப்பட்டது.

தேசிய விருதுகளை வென்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் படத்தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு பேசுகையில்,

"தம்பி வெற்றிமாறனை எனக்கு அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ் தான். தனுஷ் தம்பி சொல்லும் போது வெற்றியோடு நாம் ஒரு படம் பண்ணுவோம் சார் என்றார். வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் என்னிடம் சார் இந்தப்படத்திற்காக வாங்கிய பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொன்னார். 

வெளியீட்டுத் தேதி குறிப்பிட்ட பின் உடல்நலன் சரியில்லை என்றாலும் அவர் தன்னை வருத்திக் கொண்டு வேலை செய்தார். அவரிடம் இருக்கும் உழைப்பு தான் அவரை உயர்த்துகிறது. படத்தின் எடிட்டிங் நேரத்தில் அவருக்கு சிக்கன்குணியா நோய் வந்துவிட்டது. ஆனாலும் அதைத் தாங்கிக் கொண்டு வேலை செய்தார். அவரின் இலக்கு பணமல்ல, வெற்றி தான். அதுக்குத் தான் அவருக்கு வெற்றிமாறன் என்ற பெயர்.

வெற்றிமாறனின் உழைப்புக்கு நான் என்றும் உதவியாக இருப்பேன். என்றும் அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். இன்னும் இந்தப் படத்தில் நிறைய பேருக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஜீவி பிரகாஷுக்கு இசைக்குக் கிடைக்கும் என்று நம்பினேன். 

நடிகர் தனுஷுக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் ரவுண்டிலே தனுஷுக்கு விருதை எடுத்து வைத்துவிட்டார்கள். 1992-ல் எனக்கு பாலுமகேந்திரா ஒரு விருது வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு தம்பி வெற்றிமாறன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காக நடிகர் தனுஷுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்," என்றார்.

வெற்றிமாறன் பேசியதாவது,

“ஒரு படம் பண்னும் போது அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சமூகநீதிக்கான ஒரு உரையாடல் இருந்தது. அதே நேரம் இந்தப் படத்தை மெயின் ஸ்ட்ரீம் படமாக பண்ணவும் செய்தோம். 

இந்த மாதிரியான விருது படத்தில் உழைத்தவர்களுக்கு ஒரு உற்சாகம் தரக்கூடியது. மீடியா இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு படம் நல்லா வரும்னா அது தன்னைத் தானே சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இந்தப் படத்தில் எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. 

குடும்பம், மனைவி அக்கா, அப்பா, குழந்தைகள், மற்றும் என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. என் உதவி இயக்குநர்கள் மிகுந்த மனபலம் வாய்ந்தவர்கள். என் எமோஷனல் கோபத்தை எல்லாம் தாங்கிக்கொள்வார்கள். என் கேமராமேன் வேல்ராஜ் சார் ரொம்ப நேர்த்தியாக செய்திருந்தார். ஜீவி பிரகாஷ் பேக்ரவுண்ட் சாங்ஸ் ரொம்ப ஸ்பெசலா இருந்தது. 

கலை இயக்குனர் ஜாக்சன் நான் தயாரிப்பாளரிடம் போடுற சண்டையை அவர் போட்டுவிடுவார், அவருக்கும் நன்றி. ராமர் மேடைக்கு வந்தாலே பயம்.. எடிட்டிங் வேலையை அவர் எனக்காகக் காத்திருந்து காத்திருந்து செய்தார், அவருக்கு நன்றி. 

எனக்குக் கிடைக்கும் நடிகர்கள் எல்லாருமே எனக்கு கிடைத்த கிப்ட். கென் தான் இந்தக் கதைக்கு முதல் தொடக்கம். சிவசாமிக்காக கூட ரெண்டு மூனு பேரிடம் போய், அதன்பின் தான் தனுஷ் வந்தார். கென்னை தனுஷ் நன்றாக ஊக்கப்படுத்தினார். மஞ்சுவாரியார் நடிப்பு தான் இந்தப்பட த்தை குடும்பத்திற்கான படமாக மாற்றியது. 

தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும் அவர் யார் மகன் கேரக்டர் என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது. தாணு சார் இந்தக் கதையை நாலு பக்கம் படித்துவிட்டு ஓ.கே பண்ணுவோம் என்றார். ரொம்ப ஸ்ட்ரெஸ்புல் வொர்க்காக இருந்தது. குறிப்பாக டப்பிங்கில் எல்லாம் என்னால் முழுதாக இருக்க முடியவில்லை. நம் வார்த்தையை நம்பி பணம் போடுபவர்களுக்கு நாம் திருப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். அதை நான் கவனமாகக் கையாண்டு வந்தேன். தாணு சார் இந்தப் படத்திற்கு கிடைத்தது தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு இப்படம் போனதற்குக் காரணம்," என்றார் .

அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் வீடியோ கால் மூலம் பேசுகையில்,

"ரொம்ப சந்தோசமா இருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு மீடியா தொடர்ந்து கொடுக்குற சப்போர்ட்டுக்கு நன்றி. அசுரன் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு. தாணு சார் வெற்றிமாறனுக்கு ரொம்ப நன்றி" என்றார்.

மேலும், படத்தில் நடித்த கென், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், எடிட்டிர் ராமர், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினர்.

Tags: asuran, dhanush, vetrimaaran

Share via: