ரஜினிகாந்த் வாழ்த்திய ‘மழையில் நனைகிறேன்’

04 Dec 2024

ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கத்தில், அன்சன் பால், ரெபா மோனிகா ஜான்,  சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’.

 காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வெளியாகிறது. இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியீட்டுக்கு முன்பே ஒரு படம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுததியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார்,  ரஜினிகாந்த்தின் ரசிகராம். முத்து படம் வெளியான போது, ரஜினிகாந்த் போட்ட அதே கெட்டப்புடன், கையில் சாட்டையுடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தாராம். அந்த அளவுக்கு ரஜினிகாந்தின் ரசிகராக இருக்கும் இவரைப் பற்றி ரஜினிகாந்திடம் நண்பர் ஒருவர் சொல்ல, உடனே அவர் தயாரித்திருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்திற்கு வாழ்த்து கூறியதோடு, அந்த வீடியோவை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் ரஜினிகாந்த் அனுமதி வழங்கிவிட்டாராம்.

தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார் படம் பற்றி பேசுகையில்,

“இயக்குநர் சுரேஷ் என் தம்பியுடன் படித்தவர் என்பதால் அவர் என்னிடம் கதை சொன்னார். நானும் அவருக்காக சில தயாரிப்பாளர்களை அணுகினேன். சில காரணங்களால் அவர்களால் படம் தயாரிக்க முடியாமல் போனதும், அப்போது தான் நானே தயாரிக்க முன் வந்தேன். இது ஒரு அழகான காதல் கதையாக மட்டும் அல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும். எந்த இடத்திலும், எந்தவித நெருடலும் இல்லாமல் படம் பயணிக்கும்.

 ரஜினி சார் என் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருப்பது கடவுளின் ஆசி போன்றது. நான் அவருடைய வெறித்தனமான ரசிகன்,  நான் தயாரித்த படத்திற்கு அவரது வாழ்த்து கிடைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

 படம் குறித்து இயக்குநர் டி.சுரேஷ் குமார் கூறுகையில்,

“முழுக்க முழுக்க காதல் கதை தான். நாயகியை நாயகன் ஒருதலையாகக் காதலிக்கிறார். அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கும் நாயகி காதலை நிராகரித்து விடுகிறார். அவர் நிராகரித்தாலும், அவர் மனதில் என்றாவது ஒருநாள் காதல் மலரும், அது வரை காத்திருப்பேன், என்று நாயகன் காத்திருக்கிறார். அவரது காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா ? நாயகியின் அமெரிக்க கனவு பலித்ததா? என்பது தான் கதை.

காதல் கதை என்பதும், ஹீரோயினுக்கு நாயகன் காதல் தொல்லை கொடுப்பது போன்றோ அல்லது பெண்ணுக்கு தொந்தரவு குடுப்பது போன்றோ காட்சிகள் இருக்காது. குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு  பீல் குட் மூவியாக இருக்கும்,” என்றார்.

நாயகன் அன்சன் பால் கூறுகையில்,

‘’ரெமோ’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானேன். இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். என் கதாபாத்திரத்திற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதை நன்றாக செய்திருக்கிறேன், என்று நம்புகிறேன்,” என்றார்.

நடிகை ரெபா மோனிகா ஜான் கூறுகையில்,

“அழகான காதல் கதையாக இருக்கும். படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருக்கிறது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்ய, ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

Tags: mazhaiyil nanaigiren

Share via: