கமல்ஹாசன் வசனத்திற்கு 14 வருடங்கள் கழித்து பதில் தரும் ‘மாயோன்’

02 Jun 2022

கமல்ஹாசன் நடித்து 2008ல் வெளிவந்த திரைப்படம் ‘தசாவதாரம்’. அப்படத்தில் ‘கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்,” என்ற ஒரு வசனம் பேசியிருப்பார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு வசனம்.

அன்று கமல்ஹாசன் பேசிய வசனத்திற்கு 14 வருடங்களுக்குப் பிறகு பதில் கிடைத்திருப்பதாக ‘மாயோன்’ படக்குழு தெரிவித்துள்ளது.

சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். 

டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் கமல்ஹாசன் நடித்து நாளை வெளியாக உள்ள ‘விக்ரம்’ படத்துடன் 500க்குமேலான தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.  

மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தசாவதாரம் படத்தில் ‘கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்’ என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். 

இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன ?, படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

‘மாயோன்’ ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags: maayon, sibi sathyaraj, tanya, ilaiyaraaja

Share via: