தின்க் ஸ்டுடியோஸ், த ஷோ பியூப்புள் தயாரிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கேப்டன்’.

இப்படம் நாளை செப்டம்பர் 8ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக 20 அடி உயரம், 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் ஒரு ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளார் ஆர்யா.

அது பற்றி அவர் பேசுகையில்,

இப்படம் மிக புதுமையானதாக இருக்கும் எனது கதாபாத்திரத்திற்கும் 120 அடி வேற்று கிரக உயிரினத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட ஆக்‌ஷன் காட்சி இதில் உள்ளது. அந்தக் காட்சியை படமாக்குவது பயங்கரமான சவாலாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 

க்ளைமாக்ஸ் காட்சியை மூணாறில் எடுக்க முடிவு செய்திருப்பதாக சக்தி என்னிடம் தெரிவித்தபோது, குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதம் என்பதால் என்னால் அதை  முழுமையாக செய்ய முடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. மழை காலத்தில் அதிரடி காட்சியை படமாக்குவது மிகவும் சவாலானதாக மாறியது. அந்த காட்சியில் நான் கிரேன் மூலம் 20 அடி உயரத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டேன். அந்த உயரத்தில், அடுத்த 3 நாட்களுக்கு, அந்தக் காட்சியை  எடுக்கும் பணி பயங்கரமானதாக இருந்தது.  

ஒருவழியாக எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைத்தபோது, ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் இன்னொரு  காட்சியை படமாக்க வேண்டும் என்று சக்தி மீண்டும் என்னிடம் கூறினார். அப்போது மிகவும் குளிர்காலம். குளிரில் படப்பிடிப்பு முற்றிலும் கடினமாக இருந்தது. படம் முழுக்கவே அனைவரும் மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். டிரைலர் எல்லோரையும் கவர்ந்திருப்பதும் பல பக்கங்களிலிருந்து வரும் பாராட்டுக்களும் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கும் அனுபவம் கிடைக்கும்,” என்கிறார்.