75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் - ‘சாதகப் பறவைகள்’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

17 Jul 2022

JR-7 மற்றும் ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறும். 

இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,

1.இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறோம். 75 பின்னணி மற்றும் முன்னணி பாடகர், பாடகியரும் 75 பாடல்களை பாடும் ஒரு முழு இசை நிகழ்ச்சியாக இந் நிகழ்ச்சி அமையும்.

2.இந்நிகழ்ச்சியின் மூலம் “UNITED SINGERS CHARITABLE TRUST”என்ற அமைப்பிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இது அமையும். இந் நிகழ்ச்சியின் வாயிலாக திரட்டப்படும் தொகையிலிருந்து ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு உதவித்தொகையாக வழங்க உள்ளோம்.

3.அனைத்து துறைகளிலிருந்தும் 75 முக்கிய பிரமுகர்களை இந் நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து கொண்டாட அழைத்திருக்கிறோம்.

4.இந் நிகழ்ச்சியை நாங்கள் 3 பகுதிகளாக வடிவமைத்து இருக்கிறோம். காலை 10 மணியளவில் இந் நிகழ்ச்சி பிரபலங்களுடன் துவங்கி பின் திரையிசைப் பாடகர்களுடன் பகல் 12 மணி வரை நடைபெறும். அடுத்த பகுதி 3 மணியிலிருந்து 5 மணி வரையிலும், அதன் அடுத்த பகுதி மாலை 6.30 மணியளவில் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரையிலும் நடைபெறும். கடைசி பகுதியில் நம் திரையிசைத் துறையில் சாதித்த சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.

5.முதன்முறையாக பார்வையாளர்கள் அனைவரையும் திரையிசைத் துறையின் 75 வருடத்திற்கு பின்னோக்கி அழைத்து செல்ல இருக்கிறோம். இதன் தொடக்கமாக G.ராமநாதன் ஐயர், பாபநாசம் சிவன் மற்றும் S.M.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைத்த பாடல்களில் துவங்கி, பின் M.S.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, K.V.மகாதேவன் மற்றும் V.குமார் அவர்களின் பாடல்களை பாடவிருக்கிறோம். இந் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் A.R.ரஹ்மான் அவர்களுடைய பாடல்களை தனி பகுதியாகவே பாடத்திட்டமிட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேவா, வித்யாசாகர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடைய பாடல்களை பாடவிருக்கிறோம். மேலும் இளம் இசையமைப்பாளர்களான D.இமான், அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களும் இந் நிகழ்ச்சியில் இடம் பெறும்.

6.இந் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் நம் தேசிய கீதத்தை ஒன்றாக இணைந்து ஒரே மூச்சில் பாட செய்வதன் மூலம் இந் நிகழ்ச்சி நிறைவுபெறும்.

7.இந் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து அனைத்து வணிக வளாகங்கள், கடற்கரை, IT நிறுவனங்கள் இதர பொது இடங்களிலும் சிறிய நிகழ்ச்சிகள் மூலம் தொடங்கவிருக்கிறோம்.

8.இந் நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த நம் மாநிலத்தை சேர்ந்த சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.

9.இந் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும், பிரச்சாரத்தையும் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் செய்யவிருக்கிறோம்.

டிக்கெட்டுகளுக்கு BOOK MY SHOW வாயிலாகவும், PAYTM வாயிலாகவும் பெற்றுக் கொள்ளவும்.

என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
 

Tags: india, independence day, 75 independence day, sadhaga paravaigal

Share via: