எனக்கு பல கனவுகள் இருக்கிறது - ஹிப்ஹாப் தமிழா

22 Feb 2020

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘நான் சிரித்தால்’.

இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

“சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார் என்று சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்க்க சொன்னார். 

பார்த்ததும் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன். அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நான் தான் வில்லனா என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன் என்றார். இந்த கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன்.

நான் சில காட்சிகளில் சில யோசனைகளை ராணாவிற்குக் கூறுவேன். சிலவற்றை கேட்டுக் கொள்வார். சிலவற்றுக்கு அது இந்த இடத்திற்கு பொருந்தாது என்று கூறுவார். ராணா இப்படத்துடன் நிற்காமல் விரைந்து அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும்.

ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

புதுமுக இயக்குநர்களுடன் 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய மொத்த குழுவினருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் ராணா பேசும் போது,

“ஆதி, சுந்தர்.சி. மற்றும் குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது.

கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிக்குமார் ஊக்குவித்தார்.

எனது நண்பர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி,” என்றார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது,

“இப்படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்று வரை எனது ரசிகர்கள் ஆதரவளித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு சரி எது ? தவறு எது ? என்று சுட்டிக் காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

இயக்குநர் சுந்தர்.சியுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

நான் பள்ளியில் படிக்கும்போது 'ராப்' பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். 

என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களை எங்களது ஒவ்வொரு படங்களிலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம். அப்படித் தான் யூடியூப்-ல் ராணாவைப் பார்த்து அழைத்து வந்தோம். அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது. 

கே.எஸ்.ரவிக்குமார் திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதைக் கூறிவிடுவார். இப்படத்தில் தூணாக இருந்தார்.

படத்தில் இரண்டாவது பாதியை வெற்றிபெறச் செய்தது கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, ராணா ஆகியோர் தான். நாயகன், நாயகி போல எனக்கும், என் அப்பாவாக நடித்த ‘படவா’ கோபிக்கு கெமிஸ்ட்ரி பேசும்படியாக வந்திருக்கிறது.

ராஜ்மோகனின் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கதிர் கடின உழைப்பாளி. அவருடைய திறமைக்கு விரைவிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்.

மேலும், இப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் நன்றி.

‘ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றிப் பேசுவதை அவர் விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு.

ஐஸ்வர்யா மேனன் ‘பிரேக் அப்’ பாடலில் காலணி கூட இல்லாமல் சிறப்பாக நடனமாடினார். அதேபோல், நேரம் தவறாமைக்கு ஐஸ்வர்யா மேனன் சிறந்த உதாரணம்.

எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி,” என்றார்.

நடிகை குஷ்பூ பேசும் போது,

“இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். 

அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். 

ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

கே.எஸ்.ரவிக்குமாருடன் நீண்ட நாள் நட்பு இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள்.

இன்றைய காலத்தில் நகைச்சுவையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு. ஆனால், நாங்கள் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்டார்.

எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி.

என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான் காரணம்,” என்றார்.

Tags: naan sirithal, rana, aathi,

Share via: